இந்தியா
நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: வருத்தம் தெரிவிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்!
நாகலாந்து மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
நாகலாந்து துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளி செய்த நிலையில் சற்று முன்னர் அவர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
நாகலாந்தில் பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதில் அரசு வருத்தம் தெரிவிப்பதாகவும் நாகலாந்தில் தற்போது சூழல் கட்டுக்குள் உள்ளதாகவும் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு ஒரு மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
மேலும் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலை அடுத்தே அங்கு பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி உள்ளனர் என்றும், அப்போது அங்கு வந்த வாகனம் ஒன்று நிற்காமல் சென்றதால் அதில் தீவிரவாதிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தான் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் என தவறுதலாக நினைத்து வாகனத்தில் இருந்தவர்கள் கொல்லப்பட்டனர் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு படையினரை தாக்கியதில் ஒரு வீரர் உயிரிழந்ததாகவும் அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.