தமிழ்நாடு
நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நல்ல வெற்றியைப் பெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது. இதன் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன என்பதும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த வாக்காளர் பட்டியல் வெளியான உடன் வாக்காளர்கள் தங்களது பெயர் அதில் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொண்டு ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் உடனடியாக வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.