தமிழ்நாடு
ஒமைக்ரான் வைரஸை கண்டுபிடிக்க 4 இடங்களில் ஆய்வகங்கள்: தமிழக அரசு அதிரடி
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருவதாகவும் இதனால் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களை பல நாடுகள் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இஸ்ரேல், பிரேசில், ஹாங்காங் உள்ளிட்ட ஒருசில நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என்பதும் இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள விமான நிலையங்களில் கூடுதல் கட்டுப்பாட்டு சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு வெளிநாட்டிலிருந்து வரும் அனைவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வகை வைரஸை கண்டுபிடிக்கவே சென்னை கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச விமான நிலையங்கள் அமைந்துள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் மொத்தம் 12 ஆய்வகங்களில் ஒமைக்ரான் வகை பரிசோதனை மையம் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் இதன் மூலம் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு அவர்களது மரபணுவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்பதை 3 மணி நேரத்தில் கண்டுபிடிக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒமைக்ரான் பரவாமல் இருக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவேளை ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டாலும் உடனடியாக அவரை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளவும் தயார் நிலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.