தமிழ்நாடு
நாளை வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு: புயலாக உருவாகுமா?
வங்கக்கடலில் ஏற்கனவே 3 காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு மேலும் வலுப்பெற்று தமிழகத்தின் பல இடங்களில் கனமழை கொடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு உருவானதற்கு பிறகு 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 10 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.