தமிழ்நாடு
தடுப்பூசி செலுத்தியிருந்தால் தான் டாஸ்மாக்கில் மது: அமைச்சர் மா சுப்பிரமணியன்
தடுப்பூசி செலுத்தி இருந்தால் தான் டாஸ்மாக்கில் மது வழங்கப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குடிமகன்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது இடங்களில் கூடுவதற்கும், தியேட்டர் மற்றும் மால்களில் வருவதற்கும் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது என்பதும் இதனால் திரையுலகினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக் மது கடை போன்ற இடங்களில் அதிக கூட்டம் கூடும் இடங்களில் இந்த நிபந்தனை விதிக்காமல் தியேட்டர்களில் தடுப்பூசி நிபந்தனை விதித்து இருப்பது நியாயமற்றது என்றும் திரையுலகினர் பலர் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வரும்போது தடுப்பு ஊசி செலுத்தி இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் டாஸ்மாக்கில் மது வாங்க வரும் ஒவ்வொருவரிடமும் தடுப்பூசி சான்றிதழ்களை சரிபார்த்து அதன்பின் மது விற்பனை செய்வது என்பது நடைமுறையில் சாத்தியமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.