தமிழ்நாடு
ஓடும் ரயிலில் ஏறிய மாணவி: நேரில் அழைத்து அறிவுரை கூறிய காவல்துறை அதிகாரி!
திருவள்ளூர் அருகே நேற்று ஓடும் ரயிலில் மாணவி ஒருவரும் மாணவர் ஒருவரும் ஏறி சாகசம் செய்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த மாணவி மற்றும் மாணவரை ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் அவர்கள் நேரில் அழைத்து அறிவுரை கூறியுள்ளார்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் பேருந்து மற்றும் ரயில் ஓடும்போது ஏறி சாகசம் செய்து வரும் காட்சிகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். ஒரு சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாணவர்கள் மட்டுமின்றி நேற்று ஒரு மாணவியும் ஓடும் ரயிலில் ஏறி சாகசம் செய்த வீடியோ வலைதளங்களில் மிக பெரிய அளவில் வைரலானது. ஓடும் ரயிலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டதை எடுத்துக்காட்டி மாணவி மற்றும் மாணவர் ஆகிய இருவரையும் அவர்களது பெற்றோர்களையும் நேற்று ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் அவர்கள் நேரில் அழைத்து அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறினார்.
இளங்கன்று பயமறியாது என கூறி அவர்களிடம் விளக்கி கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அந்த மாணவியை நேரில் விசாரித்தபோது அவர் தான் எதிர்காலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என விரும்பியதாகவும் அதேபோல் அந்த மாணவன் எதிர்காலத்தில் டிஎஸ்பி ஆக வேண்டுமென்று விரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
The girl wants to become IPS. The boy wants to become DSP.
— Dr.Varun Kumar IPS (@VarunKumarIPSTN) November 25, 2021