தமிழ்நாடு
தமிழகத்தில் ‘கலைஞர் உணவகங்கள்’: அம்மா உணவகங்கள் பெயர் மாறுகிறதா?
தமிழகத்தில் 500 கலைஞர் உணவகங்கள் புதியதாக திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அம்மா உணவகங்கள் கடந்த ஜெயலலிதாவின் ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதும், இந்த உணவகங்களில் மிகக் குறைந்த விலையில் உணவுகள் விற்பனை செய்யப்படுவதால் ஏழை எளிய மக்கள் பெரும்பயன் அடைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வேலை பார்க்க வந்த பல இளைஞர்களுக்கு அம்மா உணவகங்கள் தான் ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே 650 அம்மா உணவகங்கள் இருக்கும் நிலையில் கூடுதலாக 500 உணவகங்கள் அமைக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
புதிதாக அமைக்கப்படும் 500 உணவகங்களுக்கு கலைஞர் உணவகங்கள் என பெயர் சூட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இருக்கும் அம்மா உணவகங்கள் பெயர் மாறாது என்றும் கூடுதலாக உருவாக்கப்படும் உணவகங்களுக்கு மட்டுமே கலைஞர் உணவகங்கள் என்று பெயர் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.