தமிழ்நாடு
12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு: 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
வங்க கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு உருமாறும் என்றும் இதன் காரணமாக 18 மாவட்டங்களில் இன்று கன மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென் தமிழகம் மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டது.
ஆனால் திடீரென சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக இன்று முதல் சனிக்கிழமை வரை தமிழகம் முழுவதற்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், ராமநாதபுரம், மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.