தமிழ்நாடு
தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு: எந்தெந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!
வங்க கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வாக மாறி தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று அளித்த பேட்டியில், ‘காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகர்வதால் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார்.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னையில் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்பு என்று கூறிய வானிலை ஆய்வு மைய இயக்குனர், நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் 4.5 கிலோ மீட்டர் உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக மாற கூடும் என்றும் அடுத்த ஓரிரு நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.