தமிழ்நாடு
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
ஆனால் அதே நேரத்தில் ஐரோப்பா நாடுகள், ரஷியா உட்படப் பலநாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய அரசும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் முழுமையாக தடுப்பு ஊசி செலுத்தி இருக்காவிட்டால் கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் லண்டன், தென் ஆப்பிரிக்கா, சீனா, நியூசிலாந்து, பிரேசில், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளும் கொரோனா தடுப்பூசி குறைந்தது ஒரு டோஸ் செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு தடுப்பு ஊசி செலுத்தி இருக்காவிட்டால் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா சான்றிதழுடன் வரவேண்டும் என்றும் மேலும் விமான நிலையங்கள் துறைமுகங்கள் ஆகிய இடங்களில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.