தமிழ்நாடு
நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ.1 லட்சம்: பாமக மாவட்ட செயலாளர் அறிவிப்பு!
நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என பாமக பாமக மாவட்ட செயலாளர் ஒருவர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இருப்பினும் இந்த படத்திற்கு பாமகவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை விட்டு வந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ அல்லது தாக்கினாலோ ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் அவர்களிடம் பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமையில் ஜெய்பீம் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
இந்த மனுவை அளித்தபின் பேட்டி அளித்த சித்தமல்லி பழனிச்சாமி, ‘வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக ஒரு குற்றவாளியின் கேரக்டருக்கு வன்னியர்களின் அடையாளமாக அக்னி குண்டத்தை காட்டியுள்ளதும், வன்னியர் சங்க தலைவர் குரு பெயரை வில்லனுக்கு வைத்து அவரது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளதும் கண்டிக்கத்தக்கது’ என்றும் தெரிவித்தார்.