தமிழ்நாடு
இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வால் எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை?
![storm cyclone - Bhoomitoday storm cyclone](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/storm-cyclone.jpg)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பதும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மழையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து என்னும் பொதுமக்கள் மீண்டு வராத நிலையில் தற்போது அந்தமான் பகுதியில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கக்கடலில் அந்தமான் பகுதிக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கேரள கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.