தமிழ்நாடு
ஒருமைப்பாடு எனும் அணை உடையும், தனியாக ஒரு தமிழ்நாடு: எச்சரிக்கும் வைகோ!
மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து ஆய்வு செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை தவிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் திமுக தலைமையில் அதன் தோழமை கட்சிகள் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இதில் ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில் மீண்டும் தற்போது இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தண்ணீருக்காக ஏங்கி நிற்கும் டெல்டா விவசாயிகளின் தீராத துன்பத்தை மத்திய அரசு குறைக்க முற்படாமல், தேர்தலுக்காக மேதாததுவில் அணைகட்ட மத்திய அரசு உத்தரவு வழங்கி உள்ளது.
அணை கட்டப்பட்டால் இந்திய ஒருமைப்பாடு எனும் அணை உடையும். தனியாக ஒரு தமிழ்நாடு இருந்தால் பன்னாட்டு சபையில் முறையிட்டு நீதி கேட்கலாம் என்ற எண்ணம் எதிர்காலத்தில் ஏற்படுவதை தடுக்கமுடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளார் அவர்.