தமிழ்நாடு
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு புயலாக உருவாகிறதா?
வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாக்குமா என்பது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும் இது நாளை மறுநாள் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி தமிழகத்தின் வடக்கு பகுதியை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உள்பட வடக்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகுமா என்பது போகப்போகத்தான் தெரியும் என்றும் இன்னும் ஓரிரு நாளில் இதில் புயலாக உருவாகுமா என்பது குறித்து சரியாக தெரிய வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புதிதாக தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு 24 மணி நேரத்தில் வட மேற்கு திசையில் நகரும் என்பதால் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மீனவர்கள் இன்னும் மூன்று நாட்களுக்கு மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ச்சியாக சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில் அது புயலாக உருவாகிவிட்டால் மேலும் பலத்த சேதம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.