தமிழ்நாடு
தீபாவளிக்கு 20,334 சிறப்புப் பேருந்துகள்.. சென்னையிலிருந்து உங்க ஊருக்குச் செல்ல எங்குப் பேருந்து கிடைக்கும் தெரியுமா?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான 20,334 பேருந்துகளும் மக்கள் பயன்பாட்டிற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்புப் பேருந்துகள் நவம்பர் 1-ம் தேதி முதல் இயக்கப்படும். சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு நவம்பர் 3-ம் தேதி வரையில் 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்புபவர்களுக்கு நவம்பர் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில் 17,719 பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் குறிப்பிட்ட இந்த நாட்களில் மாதவரத்திலிருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் புறப்படும்.
வேலூர், ஆரணி, திருத்தணி, கிருஷ்ணகிரி, திருப்பதி உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் பூவிருந்த வல்லியிலிருந்து பெறப்படும். ஈசிஆர் வழியாகச் செல்லும் பேருந்துகள் கலைஞர் நகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம் மார்க்கமாகத் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மண்டல மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் புறப்படும்.
திண்டிவனம், விக்கிரவாண்டி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, புதுச்சேரி கும்பகோணம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் எனப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.