தமிழ்நாடு
சொன்னா சொன்னதுதான்.. அந்த பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
தீபாவளியின் போது தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பது குறித்த முக்கிய தீர்ப்பை வெளியிட்ட உச்ச நீதிமன்றம் பேரியம் இரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள், சரவெடி பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என உத்தரவிட்டு இருந்தது. இந்த தடை மீறாமல் பார்த்துக்கொள்வது, குற்ற நடவடிக்கைகள் எடுப்பது மாநில அரசுகளின் கடமை என உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் பேரியம் இரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகள் தயாரிக்கவோ வெடிக்கவோ கூடாது என தமிழ்நாடு அரசும் உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பேரியம் இரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகளைச் சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேரியம் கலந்த பட்டாசுகள் வெடிக்கத் தடை விதித்து இருப்பதை ஏற்கிறோம். ஆனால் சரவெடி பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனக் கூறினால் எப்படி? கடந்த ஒரு ஆண்டாகத் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சரவெடி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் வெள்ளிக்கிழமை முதல் சரவெடி பட்டாசுகள் விற்பனை நின்று போனது மட்டுமல்லாமல் வியாபாரிகளுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கூறிவருகின்றனர்.
பேரியம் பட்டாசுகள் சுற்றுச்சூழலைப் பாதிக்கும். சரவெடி பட்டாசுகள் அதிக சத்தத்தை ஏற்படுத்தும், புகையை ஏற்படுத்தும் என்ற காரணங்களுக்காகத் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.