தமிழ்நாடு
தமிழகம் முழுவதும் தீபாவளி பரிசு சோதனை: கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றியதாக தகவல்!
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நெருங்கும் நேரத்தில் அரசு அலுவலர்களுக்கு தீபாவளி பரிசுகளை தொழிலதிபர்கள் மற்றும் காண்ட்ராக்ட் எடுப்பவர்கள் கொண்டுவந்து கொடுப்பார்கள் என்றும் அதுமட்டுமன்றி இலட்சக்கணக்கில் பணம் தீபாவளி பரிசாக கைமாறும் என்பதை கணக்கில் கொண்டு தமிழகம் முழுவதும் தீபாவளி நேரத்தில் சோதனை செய்யப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று திடீரென தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகளில் நடந்த சோதனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய இந்த சோதனையில் கட்டுகட்டாக பணம் மற்றும் பரிசுப் பொருட்கள், பட்டாசுகள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் உள்ள பல அரசு அலுவலகங்களில் தீபாவளி பரிசு என்ற பெயரில் லஞ்ச பணம் வழங்கப்பட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை இந்த சோதனை நடத்தியதாகவும் இந்த சோதனையில் பல முக்கிய அரசு அதிகாரிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
அதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் பட்டாசுகள் மற்றும் பரிசு பொருட்கள் குவிந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் டாஸ்மாக் அதிகாரிகள் மீது இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
அரசு அலுவலர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகிகளுக்கும் தீபாவளிப்பரிசு என்ற பெயரில் லஞ்சப் பணமாக கொடுக்க கூடாது என ஏற்கனவே அரசு எச்சரித்து இருந்த நிலையில் அதையும் மீறி கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.