தமிழ்நாடு
தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம்: இன்னும் சற்று நேரத்தில் கூடுகிறது!
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ள திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் ஒன்றை இன்று மாலை 4 மணிக்கு கூட்ட உள்ளது. இன்னும் 2 மணி நேரத்தில் இந்த சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியிருந்தது. இதற்கு காவிரி மேலாண்மை வாரியமும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகிறது.
கடந்த 4-ஆம் தேதி எதிர்க்கட்சியான திமுக தலைமையில் அதன் தோழமை கட்சிகள் திருச்சியில் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க இன்று மாலை 4 மணிக்கு தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் கூட உள்ளது. இந்த கூட்டத்தில் மேகதாது அணைக்கட்டும் முடிவுக்கு எதிராக தமிழக அரசின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.