தமிழ்நாடு
நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதில் மாற்றமா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் இதனால் தமிழகத்தில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.
குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டன என்பதும் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை தற்போது ஒரு சில நாடுகளில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சீனா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மூன்றாவது அலை தலைவிரித்து ஆடி வருவதாக கூறப்பட்டாலும் இந்தியாவில் மூன்றாவது அலைக்கான அறிகுறி எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்தியாவில் 100 கோடி மக்களுக்கும் மேல் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு விட்டதால் இந்தியாவில் மூன்றாவது அலை வருவதற்கு வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலை நவம்பர் 1-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கண்டிப்பாக பள்ளிகள் தொடங்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். மூன்றாவது அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பதால் பள்ளிகள் திறப்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தில் இதுவரை 50 ஆயிரம் பேர்கள் பதிவு செய்துள்ள நிலையில் 1.50 லட்சம் பேர் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.