தமிழ்நாடு
8 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, புதுக்கோட்டை, ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புதுச்சேரி காரைக்கால் போன்ற மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்யும் என்றும் சென்னை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் எனவே இந்த பகுதிக்குள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் போவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 26 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை அடுத்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.