சினிமா செய்திகள்
டெல்லிக்கு கிளம்பிய ரஜினிகாந்த்: வருத்தமாக இருப்பதாக செய்தியாளர்களுக்கு பேட்டி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று டெல்லி செல்ல உள்ள நிலையில் அதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த தகவல் வெளிவந்துள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த விருது அக்டோபர் 25-ஆம் தேதி தேசிய விருதுகள் வழங்கப்படும் போது தாதா சாகேப் விருது அவருக்கு வழங்கப்படும் என்று செய்திகள் வெளியானது. தாதா சாகேப் பால்கே விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்குவார் என்றும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் நாளை தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற உள்ளதை அடுத்து இன்று சென்னையில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் டெல்லி கிளம்பினார். அதற்கு முன்னர் அவர் போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது தாதா சாகேப் பால்கே விருது பெறுவதற்காக டெல்லி செல்வதாகவும் இந்த விருது தனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த விருது தனக்கு கிடைக்கும் நேரத்தில் இயக்குனர் இமயம் பாலசந்தர் அவர்கள் இல்லையே என்ற வருத்தம் எனக்கு மிக அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் டெல்லி சென்று விட்டு விருதை வாங்கி விட்டு சென்னை திரும்பிய உடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி என்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.