தமிழ்நாடு
ஜெயலலிதாவுக்கு திமுக எம்பி கனிமொழி புகழாரம்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அவருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பால் மரணமடைந்தார். 75 நாட்கள் அப்பல்லோவில் உயிருக்கு போராடிய அவர் டிசம்பர் 5-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய இந்த இழப்பு தமிழக அரசியலில் இன்று வரை நீடிக்கிறது.
இந்நிலையில் அவரது நினைவு நாளான இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள அவரது ஆதரவாளர்கள் துக்கம் அனுசரித்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அத்தனை பேரும் அமைதி ஊர்வலமாக சென்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் எதிர்க்கட்சியை சேர்ந்த திமுக எம்பி கனிமொழியும் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆணாதிக்கம் மிகுந்த அரசியலில் ஒரு பெண் வெற்றிபெற்றிருப்பது சாதாரண காரியமில்லை. மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி கண்டவர். அவருடைய இறுதிநாட்கள் குறித்த மர்மங்கள் மிகவும் துரதிருஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.