தமிழ்நாடு
எதுக்கு அடிக்குறீங்க: கதறிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்று பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தல் தள்ளி வைப்பதாக கூறி விட்டு தேர்தல் அதிகாரி வெளியே வந்ததால் அவரது வாகனத்தை முற்றுகையிட்டு முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வாக்குவாதம் செய்தனர். அப்போது அங்கு அதிமுக மற்றும் திமுக தொண்டர்களிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதனை அடுத்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு வந்து கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர்.
ஒரு கட்டத்தில் கூட்டத்தில் இருந்தவர்கள் பெரும் பிரச்சனை செய்ததால் வேறு வழி இல்லாமல் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினர் கைது செய்யப்பட்ட போது சிலர் ஒத்துழைக்காததால் அவர்களை அடித்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து எதுக்கு அடிக்கிறீங்க என எம்ஆர் விஜயபாஸ்கர் கதறிய காட்சிகள் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இன்று மதியம் 2.30 மணிக்கு ஊராட்சி அலுவலகத்தில் துணை தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுகவை சேர்ந்த 4 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், அதிமுக மற்றும் கூட்டணியை சேர்ந்த 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஊராட்சி அலுவலத்திற்கு வந்திருந்தனர்.
இந்தநிலையில் தேர்தல் அலுவலகரான மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட அலுவலர் திடீரென தேர்தலை ஒத்தி வைப்பதாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அதிமுக மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை அடுத்து முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர், மாவட்ட ஊராட்சி தலைவர் கண்ணதாசன் உள்ளிட்ட 50 பேரை காவல்துறையினர் கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.