தமிழ்நாடு
விஜயபாஸ்கரின் மனைவி, மகளுக்கு கொரோனா: ரெய்டில் திடீர் திருப்பமா?
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வரும் நிலையில், திடீரென விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை செய்து வருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வரும் நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானத்துக்கு அதிகமாக அவர் சுமார் 30 கோடிக்கு மேல் சொத்து சேர்த்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் விஜயபாஸ்கரின் தந்தை, மனைவி, மகள்கள் மற்றும் மாமனார் ஆகியவர்களுடன் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மூத்த மகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் 3 நாட்கள்தான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் பாபு முருகவேல் என்பவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள விஜயபாஸ்கர் மனைவியிடம் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.