தமிழ்நாடு
மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கி வைத்தேன்: ஜெ சமாதியில் சசிகலா பேட்டி!
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் மரியாதை செய்த சசிகலா செய்தியாளர்களை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விடுதலை ஆனார் என்பதும் விடுதலையான பின்னர் அவர் முதல்முறையாக இன்று ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு இன்று சசிகலா வருகை தருவதை அடுத்து மெரினா கடற்கரை எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதி அமைந்துள்ள பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜெயலலிதா சமாதியிலும் எம்ஜிஆர் சமாதியிலும் மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ‘கழகத்தையும் தொண்டர்களையும் ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு செல்கிறேன் என்று தெரிவித்தார்.
நடந்த விஷயங்களை எல்லாம் ஜெயலலிதாவிடம் கூறினேன் என்றும் நல்ல எதிர்காலம் உள்ளது என்பதையும் சொல்லி விட்டு தான் வந்தேன் என்றும் அவர் தெரிவித்தார். என் வயதில் முக்கால் பகுதியை ஜெயலலிதாவுடன் இருந்தேன் என்றும் இந்த ஐந்து ஆண்டுகால இடைவெளியில் நான் என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கி வைத்தேன் என்றும் சசிகலா கூறினார்
முன்னதாக ஜெயலிதா சமாதியில் சசிகலா வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய நிலையில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் உணர்ச்சிமிகுதியில் அவருக்கு வரவேற்பளித்தனர் என்பதும் அந்த வரவேற்பை பார்த்து சசிகலா கண்கலங்கிய தொண்டர்களை நெகிழ்ச்சியுடன் பார்த்து கையசைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.