உலகம்
மீண்டும் முடங்கிய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்: டெலிகிராமுக்கு அடித்த லக்!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகின் முன்னணி சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை திடீரென முடங்கியதால் உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பெரும் அவதிப்பட்டனர். சமூகவலைதளங்களில் தங்களுடைய பதிவு செய்யாமல், தகவல் பரிமாற்றம் செய்ய முடியாமல் பலர் திணறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்த இந்த பிரச்சனையை பேஸ்புக் வல்லுநர்கள் உடனடியாக சரி செய்ய முடியாமல் திணறியதாகவும், கிட்டத்தட்ட ஏழு மணி நேரத்திற்கு பிறகு இந்த பிரச்சனையை சரிசெய்ததாகவும் கூறப்பட்டது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை முடக்கத்தின் காரணமாக பேஸ்புக் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான மில்லியன் பணம் இழப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை மீண்டும் முடங்கியுள்ளது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியதை அடுத்து அதன் பயனாளர்கள் தங்களது பெரும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்
பேஸ்புக் மெசஞ்சர் பயனாளர்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட சில பயனர்கள் மட்டுமே இந்த பிரச்சனையை சந்தித்து உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக மீண்டும் ஒருமுறை ஃபேஸ்புக் நிர்வாகம் மன்னிப்பு கோரி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பிரச்சனை இன்னும் ஒரு சில மணி நேரங்களில் சரி செய்யப்படும் என்றும் பேஸ்புக் தகவல் தெரிவித்துள்ளது
இந்த நிலையில் பேஸ்புக் முடக்கத்தால் ஏற்கனவே ஒரே நாளில் மில்லியன் கணக்கான புதிய பயனாளர்களைப் பெற்ற டெலிகிராமம் இன்றும் லட்சக்கணக்கில் புதிய பயனாளர்கள் பெற்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் ஃபேஸ்புக்கின் முடக்கம் காரணமாக டெலிகிராமுக்கு செம லக் அடித்ததாக கூறப்படுகிறது.