இந்தியா
IMPS பணப் பரிமாற்றம்: ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!
IMPS என்ற முறையின்படி பண பரிமாற்றம் செய்வதில் 2 லட்சம் மட்டுமே இதுவரை அதிகபட்சமாக இருந்த நிலையில் தற்போது அந்த தொகையை உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
IMPS மற்றும் NEFT ஆகியவற்றில் பண பரிமாற்றத்தை 24 மணி நேரமும் செய்யலாம் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. இதனை அடுத்து வழக்கத்தை விட தற்போது அதிக அளவில் பண பரிமாற்றம் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் இன்று ரிசர்வ் வங்கி தனது நாணயக் கொள்கை கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் பேசிய இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் கவர்னர் சக்திகாந்த் தாஸ் அவர்கள் IMPS பண பரிமாற்ற சேவையில் இதுவரை 2 லட்சம் ரூபாய் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இனிமேல் 5 லட்ச ரூபாய் வரையில் அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு காரணமாக அதிக அளவில் பண பரிமாற்றம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்திற்கும் அதிக அளவு ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக யூபிஐ தளத்தில் தற்போது அதிக அளவில் பண பரிமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் கடந்த 2020ம் ஆண்டில் பண பரிமாற்றம் செய்யப்பட்டதை விட 2021 ஆம் ஆண்டில் 42 சதவீதம் யுபிஐ மூலமாக பண பரிமாற்றம் செய்வது அதிகரித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கவர்னர் கூறினார்.
அதேபோல் யுபிஐ அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் டெபிட் கார்டு கிரெடிட் கார்டு ஆகியவற்றின் நேரடி பயன்பாடு குறைந்துள்ளதாகவும் யுபிஐ தளத்தை பயன்படுத்தி செய்யப்பட்ட ணப் பரிமாற்றம் பாதுகாப்பானதும் கூட என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.