இந்தியா
வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கை அடுத்து ஜியோவிலும் கோளாறு: பயனர்கள் அவதி!
சமீபத்தில் உலகின் முன்னணி சமூக வலை தளங்களான வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது என்றும் இதனால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே.
சுமார் 7 மணி நேரம் முடக்கத்திற்கு பின்னர் மீண்டும் வாட்ஸ்அப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆகியவை இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாட்ஸ் அப் உள்பட ஒருசில சமூக வலைதளங்களின் முடக்கத்தை அடுத்து தற்போது ஜியோ நெட்வொர்க்கில் திடீரென கோளாறு ஏற்பட்டு இருப்பதாக பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர்.
ஜியோ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பலர் நெட்வொர்க் இணைப்பில் கோளாறு ஏற்பட்டதாக டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். போன் அழைப்பில் சிக்கல் ஏற்படுவதாகவும் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்றும் ஜியோ பயனர்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
ஜியோ பயனர்களின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஜியோ நிர்வாகம் இடையூறுகளுக்கு வருந்துகிறோம் என்றும் இந்த பிரச்சனைகள் தற்காலிகமானது என்றும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.
மேலும் ஜியோவின் சேவை திடீரென கோளாறு ஏற்பட்டதை அடுத்து இது குறித்த மீம்ஸ்களை மீம்ஸ் கிரியேட்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.