தமிழ்நாடு
அரசு பேருந்துகளில் தீபாவளி முன்பதிவு: ஒரே நாளில் இத்தனை ஆயிரம் பேர்களா?
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள் நேற்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து துறை அறிவித்திருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சுமார் 28 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அடுத்த மாதம் அதாவது நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் நவம்பர் 4, 5, 6, 7 ஆகிய நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து நவம்பர் மூன்றாம் தேதி இரவே ஏராளமானோர் தீபாவளிக்காக சொந்த ஊர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையிலிருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு செல்ல உள்ள நிலையில் ஏற்கனவே ரயில்களில் பலர் முன்பதிவு செய்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று முதல் அரசு பேருந்துகளில் தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து துறை அறிவித்திருந்தது.
இதனை அடுத்து போக்குவரத்து துறையின் இணைய தளங்களில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்த முயற்சி செய்ததால் இணையதளம் சிறிது நேரம் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சொந்த ஊர் செல்வதற்காக சுமார் 28 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருப்பதாகவும் இன்னும் அதிகமாக முன்பதிவுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் போக்குவரத்து துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அனேகமாக நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் சுமார் ஒரு லட்சம் பேர் முன் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.