தமிழ்நாடு
எக்மோ பொருத்திய பின்னர் ஜெயலலிதாவின் உடல்நிலை: மருத்துவர் மதன்குமார் வாக்குமூலம்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் அந்த மர்மத்தை களைய ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று விசாரித்து வருகிறது.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த விசாரணையில் நேற்று அப்பல்லோ மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மதன்குமார் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர், எக்மோ கருவி பொருத்தியபின்னும் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை இதனால் டிசம்பர் 5-ஆம் தேதி எக்மோ கருவி அகற்றப்பட்டது.
மேலும் ஜெயலலிதாவிற்கு இதயம், நுரையீரல் மாற்றும் திட்டம் இருந்ததா என விசாரணை ஆணையம் கேட்டதற்கு அப்படி எதுவும் விவாதிக்கப்படவில்லை என மருத்துவர் மதன்குமார் பதிலளித்தார். ஆனால் முன்னதாக வாக்குமூலம் அளித்த டெக்னீசியன் கூறுகையில், எக்மோ கருவி பொருத்திய பின்னர் டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதாவின் இதயம் தானாக இயங்கத்தொடங்கியதாக முரண்பட்ட தகவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.