தமிழ்நாடு
விசாரணைக்கு ஆஜராக இயலாது என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினாரா?
கடந்த ஆறு மாதங்களாக திமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த காலகட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சிலரது வீடுகளில் அதிரடியாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்தோம்.
குறிப்பாக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்பட ஒருசில அமைச்சர்களின் வீட்டில் அதிரடியாக சோதனை செய்யப்பட்டது என்பதும், இதனை அடுத்து பல்வேறு ஆவணங்கள் அமைச்சர்களின் வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்த நிலையில் தற்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறையினர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருப்பதால் சம்மனில் குறிப்பிட்ட தேதியில் தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என எம்ஆர் விஜயபாஸ்கர் கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரான எம்ஆர் விஜயபாஸ்கர் வீடு உள்பட பல இடங்களில் ஒரே நேரத்தில் கடந்த ஜூலை மாதம் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் அடிப்படையில் தான் அவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.