இந்தியா
ரூ.70 ஆயிரம் கோடிக்கு வரி கட்டணும்: கேரளாவில் ஒரு ‘சதுரங்க வேட்டை’ மோசடி!
![kerala fraud - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/kerala-fraud.jpg)
புரூனே நாட்டு மன்னனின் கிரீடம் விற்ற வகையில் 70 ஆயிரம் கோடி தனக்கு வரவேண்டிய உள்ளதாகவும் அதற்கு வரி செலுத்துவதற்காக பணம் தேவைப்படுவதாகவும் அந்த பணத்தை கொடுத்து உதவுபவர்களுக்கு ரூ.100 கோடி வரை தர தயாராக இருப்பதாகவும் கேரளாவில் ஒரு சதுரங்க வேட்டை பாணியில் மோசடி செய்த மோன்சன் மாவுங்கல் என்பவரை கேரள போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மோன்சன் மாவுங்கல் என்பவர் தொல்பொருள் விற்பனை செய்து வருவதாகவும், பழங்கால பொருட்களை சேகரிக்கும் பழக்கம் உடையவர் என்றும் கூறிக் கொண்டு வலம் வந்து கொண்டிருந்தார். மேலும் இவர் ஒரு அருங்காட்சியகம் நடத்தி வருகிறார் என்பதும் அந்த அருங்காட்சியகத்தில் பழங்கால பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன என்பதும், அந்த அருங்காட்சியகத்திற்கு பல விஐபிகள் அமைச்சர்கள் காவல்துறை அதிகாரிகளும் வந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பயன்படுத்தி பல்வேறு மோசடிகளை மோன்சன் மாவுங்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் புரூனே சுல்தான் இடம் கிரீடம் விற்ற வகையில் தனது 70 ஆயிரம் கோடி வரவேண்டியது உள்ளதாகவும் அதற்கு வரி செலுத்துவதற்கான பணம் தேவைப்படுவதாகவும் அந்த பணத்தை கொடுத்து உதவி செய்பவர்களுக்கு நூறு கோடி ரூபாய் தரப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
இதற்கான ஆவணங்களையும் கூறி அவர் மோசடியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கேரள போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஆடம்பர கார்கள், கேரவன்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இரிடியம் போன்ற உலகமும் தான் விற்பனை செய்து வருவதாகவும் கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மோன்சன் மாவுங்கல், ‘சதுரங்க வேட்டை’ திரைப்பட பாணியில் பல்வேறு மோசடி செய்து பங்களாக்கள், சொத்துக்கள், கோடி கோடியாக பணத்தை குவித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவர் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் இன்னொருவரின் ஆசையை தூண்ட வேண்டும் என சதுரங்கவேட்டை திரைப்படத்தில் நட்டி நடராஜ் கூறும் வசனத்தை வைத்து இந்த மோசடியை அவர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.