தமிழ்நாடு
ஜெயலலிதாவின் இதயம் டிசம்பர் 5-ஆம் தேதி தானாக இயங்கியது: அதிர்ச்சி தகவல்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். ஆனால் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டநிலையில் அவை அனைத்தும் தற்போது வரை மர்மமாகவே உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த விசாரணை ஆணையம் தனது இறுதிக்கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. அப்பல்லோவின் தீவிர சிகிச்சை பிரிவு டெக்னீசியன் மீனல் எம்.போரா என்பவரிடம் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியபோது அவர் அதிர்ச்சியளிக்கும் சில தகவல்களை கூறியுள்ளார். ஜெயலலிதாவிற்கு எக்மோ கருவி பொருத்தியபோது அவர் கண்களில் அசைவு காணப்பட்டது, மெதுவாக மூச்சு விடத் தொடங்கினார். மேலும் டிசம்பர் 5-ஆம் தேதி அதிகாலை 3.20 மணிக்கு ஜெயலலிதாவின் இதயம் தானாக செயல்பட தொடங்கியது எனவும் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட விசாரணை ஆணையர், எக்மோ பொருத்தியபின் ஜெயலலிதாவிற்கு இதயத்துடிப்பு இல்லை என மற்ற மருத்துவர்கள் கூறுகிறார்களே, நீங்கள் ஏன் முரணாக கூறுகின்றீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் அந்த டெக்னீசியன் அதனை மறுத்துவிட்டார். ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அங்கு 4 டெக்னீசியன்கள் இருந்தோம். மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஜெயலலிதாவின் இதயத்திற்கு மசாஜ் செய்தோம் என காமேஷ் என்ற டெக்னீசியன் வாக்குமூலம் அளித்துள்ளார். இது விசாரணையில் மேலும் குழுப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.