தமிழ்நாடு
தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!
தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனியார் பள்ளியில் மாணவர்களை அழைத்து வர பயன்படுத்தும் வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய போக்குவரத்து துறை கமிஷனர் அனைத்து ஆர்.டி.ஓக்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி அந்தந்த ஆர்.டி.ஓக்களின் எல்லையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
கல்வித் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக தனியார் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்றும், அந்த பேருந்துகளில் வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர வழி திறப்பு, முதலுதவி பெட்டி, தீயணைப்பு உபகரணங்கள் ஆகியவை சரியாக உள்ளனவா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் முறையாக பராமரிப்பு செய்யாத தனியார் பள்ளி பேருந்துகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதேபோல் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர், உதவியாளர் பேருந்துகளில் பணி செய்து வருகிறார்களா? என்பது சோதனை செய்யப்படும் என்றும் இதில் சிறிய குறைபாடு உள்ள வாகனங்கள் மட்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியபோது ’தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டும் பல பள்ளிகளில் வாகனங்கள் இன்னும் சரியாக இயக்கவில்லை. எனவே 15 சதவீதம் பேருந்துக்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன் கருதி மற்ற பேருந்துகளையும் உடனடியாக கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்யாத பேருந்துகள் இயக்கப்பட்டால் உடனடியாக பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்