தமிழ்நாடு
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் செய்வது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து இந்து சமய அறநிலை துறை அமைச்சராக பணி செய்துவரும் சேகர்பாபு அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை கைப்பற்றிவதில் அவர் மிகவும் தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடப்பதற்கும் அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில் ’மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய கருத்துரு உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் விரைவில் கும்பாபிஷேகம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தால் சேதமடைந்த மதுரைவீரன் வசந்த ராயர் மண்டபம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள விரைவில் டெண்டர் விடப்படும் என்றும், மூன்று ஆண்டுகளுக்குள் இந்த மண்டபம் சீரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். . மேலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் கோயில் உண்டியலில் காணிக்கையாக வரும் தங்கம் வெள்ளி பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு கோவிலிலுக்கும் காணிக்கைகளாக வரும் தங்கம், வெள்ளி கோவில் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும், ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் தங்கம் வெள்ளி பொருட்கள் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மதுரை அழகர்கோவில் மலை பாதையில் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளது பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் ஓதுவார் பள்ளியில் புதிதாக 6 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.