தமிழ்நாடு
கண்ணகி -முருகேசன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 13 பேர்களின் தண்டனை அறிவிப்பு!
![kannagi murugesan - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/kannagi-murugesan.jpg)
கடலூரில் கடந்த 2003ஆம் ஆண்டு கண்ணகி மற்றும் முருகேசன் தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதும் இதில் 13 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருத்தாச்சலம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கண்ணகி மற்றும் முருகேசன் தம்பதியினர் அவர்களது உறவினர்களால் ஆணவக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை சிபிஐ கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 13 பேர் குற்றவாளிகள் என இன்று காலை அதிரடியாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 13 பேரில் ஒருவருக்கு தூக்கு தண்டனை என்றும் 12 பேருக்கு ஆயுள் தண்டனை என்றும் நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு கண்ணகி மற்றும் முருகேசன் தம்பதிகளின் காது மூக்கில் விஷத்தை ஊற்றி ஆணவ கொலை செய்யப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது என்றும் இதற்கு ஒருசில காவல்துறையினரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது வேதனை அளிப்பதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.