இந்தியா
காஷ்மீர் ஆளுநரை திட்டியவர்கள் இன்று பாராட்டுகிறார்கள்!
உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு மெகபூபா ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க முயன்றபோது அம்மாநில சட்டசபையை ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்து உத்தரவிட்டார். அப்போது அவரை பலரும் விமர்சித்தனர். ஆனால் அன்று விமர்சித்தவர்கள் அவரது நடவடிக்கையை இன்று பாராட்டுகிறார்கள்.
எம்எல்ஏக்கள் குதிரை பேரம், எதிர் சித்தாந்தங்கள் உள்ள கட்சிகள் இணைவது மூலம் நிலையான ஆட்சியைத் தர முடியாது போன்றவற்றையும் ஆளுநர் காரணமாகக் கூறி சட்டசபையை கலைத்தார். இதனை ஏற்காத உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேற்று பேசிய ஆளுநர் சத்யபால் மாலிக், ஆட்சி அமைக்க மெகபூபா முஃப்தி உரிமை கோரிய தினம் விடுமுறை நாளாகும். அவர்கள் என்னை ஃபேக்ஸ் இயந்திரத்தின் அருகில் எப்போதும் இருப்பேன் என்று நினைத்தார்களா என்பது தெரியவில்லை. மெகபூபாவும், உமர் அப்துல்லாவும் இணைந்து ஆட்சி அமைப்பதில் முனைப்புடன் இருந்திருந்தால், முன்னரே கடிதம் அனுப்பியிருக்க வேண்டும் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்துபடி, பேரவையைக் கலைப்பதற்கு முன்பு, குடியரசுத் தலைவரிடமோ, நாடாளுமன்றத்திடமோ நான் முன் அனுமதி பெற வேண்டியதில்லை. மத்திய அரசின் விருப்பத்தின்படி சஜ்ஜத் லோனேவை முதல்வராக்கியிருந்தால், நேர்மையற்ற மனிதராக வரலாற்றில் இடம்பெற்றிருப்பேன். என்னைத் தவறாக நினைத்தாலும் கவலையில்லை. நான் செய்தது சரி என்றே கருதுகிறேன் என்றார்.
இதற்கு மெகபூபா தற்போது பாராட்டை தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து வரும் உத்தரவை ஆளுநர் பின்பற்ற மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. முன்னெப்போதும் இல்லாத இந்த நடவடிக்கை மாநிலத்தில் ஜனநாயகத்தைக் கொடுத்துள்ளது என மெகபூபா டுவிட்டரில் பாராட்டியுள்ளார். அதேப்போல உமர் அப்துல்லா தனது டுவிட்டரில், குதிரை பேரம், பணம் ஆகியவற்றின் மூலம் பாஜக ஆட்சி உருவாக்க இருந்த நிலையில், அதைத் தடுத்து நிறுத்தியதற்காக ஆளுநருக்கு வாழ்த்துகள் என்றார்.