தமிழ்நாடு
மீண்டும் பிசியாகும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள்: அரசு வேலை கிடைக்குமென நம்பிக்கை!
காலியாக உள்ள அனைத்து அரசு பணிகளும் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை அடுத்து மீண்டும் வேலைவாய்ப்பு அலுவலங்களில் இளைஞர்கள் பிசியாக உள்ளனர்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வைத்திருந்தால் மட்டுமே அரசு பணி கிடைக்கும் என்ற நிலையில் கடந்த பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் படிப்பை முடித்த இளைஞர்கள் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம் காலியாக இருக்கும் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதுதான் என்பது கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி வந்துள்ள நிலையில் மீண்டும் அரசு பணிகளில் உள்ள காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து அரசுப் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இளைஞர்கள் மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் புதுப்பித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலங்களில் இதுவரை சுமார் 72 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 71 லட்சத்து 56 ஆயிரத்து 917 என வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதில் 24 முதல் 25 வரை உட்பட்ட பதிவாளர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 26 லட்சம் என்றும் 36 வயதுக்கு மேற்பட்டோர் பதிவு செய்துள்ளது சுமார் 13 லட்சம் என்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு ஆசிரியர் வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை மட்டும் சுமார் 2 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் அனைத்து காலி இடங்களும் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.