தமிழ்நாடு
விவசாயம் அழிந்தாலும் பரவாயில்லை: அமைச்சரின் பேச்சால் அதிகாரிகள் அதிர்ச்சி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் மின் இணைப்பை கொடுக்க மின் வாரிய ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இருந்தாலும் பல கிராமங்கள் இன்னமும் மின்சாரம் கிடைக்காமல் இருட்டில் மூழ்கி கிடக்கின்றன.
இந்நிலையில் இந்த மின்சார இணைப்பு வழங்கும் பணிகளை தீவிரமாக்க அமைச்சர்கள் அவ்வப்போது பார்வையிட்டு ஆலோசனை கூட்டங்கள் நடத்தி அதிகாரிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதுமாதிரியான ஒரு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம் பகுதிகளில் மின்சாரம் விநியோகிப்பதற்கான மின் கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது. அதனை தீவிரப்படுத்த வேதாரண்யம் டவுனில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் மாலை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓஎஸ் மணியன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
அப்போது பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மினி இணைப்பு பணியை இன்னும் தீவிரப்படுத்த நவீன டெக்னாலஜி மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான திட்டத்தை உடனே துவங்குங்கள் என்றார். அப்போது அருகில் இருந்த அமைச்சர் ஓஎஸ் மணியன் அது சாத்தியமில்லை என்றார். அதற்கு திண்டுக்கல் சீனிவாசன் வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறான், கடலுக்கு அடியில் நகரத்தையே நிர்மாணிக்கிறான். நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா என கேட்டார்.
அப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்தார். ஆனாலும் விடாமல் பதில் கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விவசாயம் அழிந்தாலும் பரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த ஆலோசனை மின்வாரிய அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.