தமிழ்நாடு
பல்லி விழுந்த குளிர்பானத்தை குடித்த பள்ளி மாணவர் மயக்கம்!
குளிர்பானங்களில் பல்லி உள்பட ஒரு சில உயிரினங்கள் இருப்பதும் அதைக் குடித்துவிட்டு ஒருசிலர் மயக்கமடைந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டு வருவதுமான செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி சிறுவன் குடித்த குளிர்பானத்தில் பல்லி இருந்ததை அடுத்து அந்த சிறுவன் மயக்கம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தநகர் என்ற பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரின் மகன், அதே பகுதியில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கிக் குடித்துள்ளார். அப்போது அந்த குளிர்பான பாட்டிலில் பல்லி இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
இந்த நிலையில் பல்லி இருந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து அந்த சிறுவனின் பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அந்த சிறுவனுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்லி விழுந்த குளிர்பான பாட்டிலை தயாரித்த சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த குளிர்பானங்களை விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவனின் பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.