தமிழ்நாடு
இன்னொரு உயிர் பலி: நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை!
நேற்று முன்தினம் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் நீட் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட்தேர்வு அச்சம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் முக ஸ்டால்லின் உள்பட பலர் அந்த மாணவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர் என்பதும் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் அந்த மாணவரின் பெற்றோருக்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. என்னதான் நிதி உதவி செய்தாலும் 19 வயது மகனை பறிகொடுத்த அந்த பெற்றோர்கள் மிகவும் மனமுடைந்து காணப்படுகிறார்கள் என செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் நீட்தேர்வுக்கு பின்னர் இன்னொரு உயிர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வை எழுதிய அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி என்ற பகுதியை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு எழுதிய பின்னர் மாணவி கனிமொழி மிகவும் சோர்வாக இருந்ததாகவும் இதனை அடுத்து தேர்வு முடிவு பயம் காரணமாக அவர் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகிஉள்ளது.
நீட் தேர்வால் இன்னொரு உயிர் பலியாகி இருப்பது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.