கிரிக்கெட்
ராஜினாமா செய்கிறார் விராத் கோஹ்லி: புதிய கேப்டன் யார்?
கடந்த சில போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சரியாக பேட்டிங் செய்யாததை அடுத்து அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி, பேட்டிங்கில் முழு கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டி20, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் ஆகியவற்றில் நம்பர்-1 வீரராக வலம் வந்து கொண்டிருக்கும் விராட் கோலி அவர்கள் சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் மிகவும் மோசமாக ஆடினார். இதனை அடுத்து அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் டி20 கிரிக்கெட் போட்டி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் கேப்டன் பதவியில் இருந்து விலக விராத் கோஹ்லி முடிவு செய்திருப்பதாகவும் தனது பேட்டிங்கில் அவர் முழு கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. இழந்த தனது ஃபார்மை மீட்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் டி20 உலகக்கோப்பை போட்டி தொடர் முடிந்த பிறகு விராட் கோலி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வார் என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விராத் கோஹ்லியின் இந்த முடிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அவரது பேட்டிங்கில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியதை அடுத்து இந்த முடிவை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராத் கோலி 2017 ஆம் ஆண்டு முதல் டி20, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் விராத் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினால் அவருக்கு பதிலாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி 6 முறை கோப்பையை வென்றதை அடுத்து அவருடைய அனுபவம் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கும்ம் பயன்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.