தமிழ்நாடு
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை!
![rain roads - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/rain-roads.jpg)
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் நல்ல மழை பெய்துள்ளதை அடுத்து நீர்நிலைகள் நிரம்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அதனை உறுதி செய்துள்ளது.
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது என்றும் இதன் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என்பதால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.