இந்தியா
மூடப்படுகிறது ஃபோர்டு கார் நிறுவனம்: ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்க வாய்ப்பு!
ஏற்கனவே ஒரு சில நாடுகளில் ஃபோர்டு கார் நிறுவனம் மூடப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவிலும் மூடப்பட உள்ளதாகவும் இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கார் உற்பத்தி செய்து வந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள வாகன உற்பத்தி ஆலைகளை மூட அந்நிறுவனம் முடிவு செய்து இருப்பதாகவும் இதனால் சுமார் 4,000 தொழிலாளர்கள் வேலை இழக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஃபோர்டு நிறுவனத்திற்கு கடந்த ஆண்டுகளில் இரண்டு பில்லியன் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே இந்தியா உள்பட ஒரு சில நாடுகளில் தனது நிறுவனத்தை மூட அந்நிறுவனத்தின் தலைமை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னை அருகே மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலை மற்றும் குஜராத்தில் உள்ள ஃபோர்டு கார் உற்பத்தி ஆலை இரண்டும் மூடப்படுவதால் ஏராளமான தமிழர்கள் மற்றும் குஜராத்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே பிரிட்டன், ஸ்பெயின், ஜெர்மனி உள்பட ஒருசில நாடுகளில் ஃபோர்டு கார் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவிலும் மூடப்பட்டுள்ளது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் ஃபோர்டு ஆலை மூடப்படுவது குறித்து தங்களுக்கு முன்கூட்டி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் திடீரென ஆலைகள் மூடுவதாக ஆலை நிர்வாகிகள் தெரிவித்ததாகவும் இதனால் கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.