தமிழ்நாடு
சிஏஏ சட்டத்திற்கு எதிராக தீர்மானம்: முதல்வர் கூறிய காரணம் என்ன தெரியுமா?
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயற்றி சிஏஏ என்ற இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சிஏஏ சட்டத்திற்கு எதிரான தீர்மானம் இன்று சட்டசபையில் இயற்றப்பட உள்ளதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்.
அதன்படி சிஏஏ சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் சட்டமன்றத்தில் முன்மொழிந்தார். குடியுரிமை திருத்த சட்டம் மதச்சார்பின்மைக் கோட்பாடுக்கும், மதநல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்றும் இலங்கை உள்பட வெளிநாட்டில் இருந்து அகதிகளாக வருவோரை மதரீதியாக பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் இந்த சட்டம் இருப்பதாகவும் முதலமைச்சர் கூறிய தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மாபெரும் துரோகம் தான் இந்த சட்டம் என்றும் இலங்கை தமிழர்களை பற்றி மத்திய அரசு கவலைப்படாமல் இந்த சட்டத்தை இயற்றி உள்ளதாகவும் இந்த சட்டத்தின் மூலம் சமத்துவத்தை மத்திய அரசு பாதுகாக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மதத்தை அடிப்படையாக கொண்டு இந்த சட்டம் உருவாக்கப்பட்டு இருப்பதால் இந்த சட்டத்தை ஆதரிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சிஏஏ குறித்த தீர்மானத்தை ஆதரிக்க தைரியம் இல்லாதவர்கள் தான் வெளிநடப்பு செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நிலையில் தற்போது சிஏஏ சட்டத்திற்கு எதிராகவும் தீர்மானம் இயற்றியுள்ளது மத்திய அரசை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.