தமிழ்நாடு
இந்திய வரைபடம் கிழிப்பட்டுப்போகும்: வைகோ எச்சரிக்கை!
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என விஸ்வ இந்து பரிஷித்தும், சிவசேனாவும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கான அறிவிப்பையும் அறிவித்துவிட்டார்கள். இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று காலை புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, விஸ்வ இந்து பரிஷித்தும், சிவசேனாவும் இந்தியாவை ரத்தக் களறியாக்க முடிவெடுத்துவிட்டார்கள். ராமர் கோவிலை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கட்டியே தீருவோம் என்று அறிவித்துவிட்டார்கள். விஸ்வ இந்து பரிஷித், ஆர்எஸ்எஸ், இந்துத்துவா சக்திகள் இந்த தேசத்தின் பன்முகத்தண்மையை சிதைத்து ஆர்எஸ்எஸ் தேசமாக்க முயற்சிப்பதால் ரத்தக் கரைப்படிந்த சிவப்பு கோடுகளால் இந்திய வரைபடம் கிழிப்பட்டுப்போகும் என்று எச்சரிக்கிறேன்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திரமோடி அல்ல, அவர்கள் நிதின் கட்கரியை பிரதமராக்கப்போவதாக செய்திகள் வந்திருக்கிறது. பாஜக அரசு வரக்கூடாது. வராது. மாநில கட்சிகளும் காங்கிரசும் இணைந்த கூட்டமைப்பு ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் கூட்டாட்சித்தத்துவம் காப்பாற்றப்படும். அதன் மூலம் இந்தியாவின் ஜனநாயகம் காப்பாற்றப்படும் என வைகோ ஆவேசமாக எச்சரித்தார்.