இந்தியா
இன்று முதல் திருப்பதியில் இலவச தரிசனம்: ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பதியில் கடந்த பல மாதங்களாக இலவச தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டது என்பதும் 300 ரூபாய் சிறப்பு தரிசன மட்டுமே கடந்த சில வாரங்களாக அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இலவச தரிசனம் அனுமதிக்கப்படுகிறது என்றும் இன்று முதல் இலவச டோக்கன் வழங்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியது.
ஆனால் அதே நேரத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மக்களுக்கு மட்டுமே இலவச தரிசனம் செய்வதற்கான அனுமதி வழங்கப் படுவதாகவும் தினமும் 2,000 டிக்கெட்டுகள் மட்டுமே இலவச தரிசனத்திற்காக டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
முதல்கட்டமாக சித்தூர் மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் மட்டும் இலவச தரிசன டோக்கன்கள் பெற்று சுவாமி தரிசனம் செய்யலாம் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலிபிரியில் உள்ள பூதேவி தங்கும் விடுதியும் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஆதார் அட்டையை காண்பித்து டோக்கன்கள் பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்ய தற்போது உள்ளூர் மக்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் ஒரு சில நாட்களில் மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கும் பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கும் இலவச தரிசனம் அனுமதிக்கப்படும் என்றும் அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.