தமிழ்நாடு
மழைநீரில் பாய்ந்த மின்சாரம்: சென்னையில் ஒருவர் பரிதாப பலி!
![rain dead - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/rain-dead.jpg)
சென்னையில் பெய்த மழை காரணமாக மழைநீரில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த மழை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி விவசாயிகளை மகிழ்விக்க செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் சென்னையில் பலத்த மழை பெய்தது. தேனாம்பேட்டை, அண்ணாசலை, எழும்பூர், தி.நகர், வடபழனி உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதியில் இருந்தனர்.
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்ததாக தகவல்கள் வெளிவந்த நிலையில் சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக மில்லர் சாலை அரசு மதுபான கடைக்கு எதிரே தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்தது. இதில் கிருஷ்ணய்யா என்பவர் பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்சார துறையினர் விரைந்து வந்து மழை நீரில் மின்சாரம் பாய்ந்ததை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் பெய்த மழை காரணமாக ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.