தமிழ்நாடு
இன்று முதல் தொடங்கியது இலவச மொட்டை: பழனி கோவிலில் பக்தர்களுக்கு டோக்கன்!
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் மொட்டை அடிப்பதற்கு காணிக்கையாக பணம் பெறப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இலவசமாக மொட்டை அடித்துக் கொள்ளலாம் என சமீபத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
இந்து சமய அறநிலை துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் சேகர்பாபு தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் இலவசமாக மொட்டை அடித்துக் கொள்ளலாம் என்றும் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கான ஊதியத்தையும் கோவில் நிர்வாகமே வழங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து அறநிலையத் துறை அதிகாரிகள் அனைத்து கோவில்களிலும் இலவச மொட்டை அடிப்பதற்கான அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்கள். இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள கோவில்களில் மொட்டை அடிக்க கட்டணம் இல்லை என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
குறிப்பாக பழனி முருகன் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் மொட்டை அடிக்கும் பக்தர்களுக்கு இலவச டோக்கன் எடுத்து கட்டணமின்றி மொட்டை அடிப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் உள்ள கோவில்கள் மொட்டை அடிக்க கட்டணம் இல்லை என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.