தமிழ்நாடு
சீமானின் பேச்சை கேட்டு ரசிப்போம், சீரியஸாக எடுக்க வேண்டாம்: அண்ணாமலை
சீமான் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவருடைய பேச்சை கேட்டு சிரிப்போம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக பொதுச் செயலாளராக இருந்த கேடி ராகவன் அவர்களின் சர்ச்சைக்குரிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இந்த வீடியோவை வெளியிட்ட மதன் என்பவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதும் கேடி ராகவன் இந்த வீடியோ குறித்து விசாரணை செய்ய பாஜகவின் குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதும், இந்த குழு தற்போது விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் கேடி ராகவன் வீடியோ விவகாரம் குறித்து கருத்து கூறிய நாம் தமிழர் கட்சியின் சீமான் ’ஒருவரின் அனுமதியில்லாமல் படம் பிடிப்பதே சமூக குற்றம் என்றும் முதலில் படம் பிடித்தவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும் என்றும் உலகில் நடக்காத ஒன்றையா கேடி ராகவன் செய்துவிட்டார் என்றும் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஒருவருக்கு ஆதரவாக சீமான் பேசுவதை பார்க்கும் போது அவர் பாஜகவின் ’பி’டீம் என்பது உறுதி ஆகி விட்டதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் சீமான் மீதும் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பதை அடுத்து அவர் அவரை போன்றவர்களுக்கும் ஆதரவு தருவதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக சீமான் கருத்து தெரிவித்தது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் ’சீமானின் பேச்சை கேட்டு ரசிப்போம் அதனை சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்றும், சீமான் எதற்கு எங்களை ஆதரிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.
சீமானின் பேச்சை தமிழக மக்கள் சீரியஸாக எடுத்து இருந்தால் அவர் எப்போதோ முதல்வராகி இருப்பார் என்றும் அவரது பேச்சை காமெடியாக எடுத்துக் கொண்டதால்தான் அவரால் இன்னும் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.